ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல்
தென்னோலை.
குறுக்கும் நெடுக்குமாக ஏழட்டு மூங்கிற் கழிகளைச்
சாதா ரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங
கிடுகுகளை விரித் திருக்கிறது.
ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு
தொங்குகிறது.
ஒரு சாண்கயிறு.
இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.
கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்
அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து
வார்த்தை சொல்லவேண்டும். இல்லாவிட்டால்,
முகத்தைத் தூக்கிகொண்டு சும்மா இருந்துவிடும்,
பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்தவீட்டுக் கயிறு பேசும்.
அதில் சந்தேகமே யில்லை.
ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.
அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள்
பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக்
கொண்டும், வேடிக்கைபேச்சுப் பேசிக்கொண்டும்
ரசப்போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.
பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர்
வைக்கலாம்.)
கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளி
யம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்
பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
“என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான்
சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ?
போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்: -- “அட போடா, வைதிக மனுஷன்!
உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது
சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?”
என்றது.
“சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்”
என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக்
குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளி
யம்மையைக் கட்டிக்கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று.
ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு
சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே
நமக்கு சந்தோஷந் தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி
தான், உள்ளதைச்
சொல்லிவிடுவதிலே என்ன
சொல்லிவிடுவதிலே என்ன
குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப்
பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை
விட்டு விட்டது.
சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்
கொண்டது.
மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும்
தழுவல், மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து
கொண்டே வந்தது.
“என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச்
சொல்ல மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம்
வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
“அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக்
கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று
கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க
வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில
விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்
விடாதே, இரு” என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிதுநேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப
மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை
விட்டுவிட்டது.
உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு
ஒரு வர்ணமெட்டு.
இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன்,
அது. மாற்றி மாற்றிப் பாடி -- கோலாஹலம்!
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகிநின்று
பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை
தானாகவேபோய்க் கந்தனைத் தீண்டும்.
அது தழுவிக்கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்!
இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக்
களியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு
வரப் போனேன்.
நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்
கந்தன் என் வரவை எதிர்நோக்கி யிருந்தது.
என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய்,
வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய
விட்டாயே” என்றது.
“அம்மா நல்ல நித்திரைபோலிருக்கிறதே?” என்று
கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து
வெளிப்பட்டு என்முன்னே நின்ற தேவனுடைய
மஹிமையை என்னென்று சொல்வேன்!
காற்றுத் தேவன் தோன்றினான்.
அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று
நினைத்திருந்தேன்.
வயிர ஊசிபோல் ஒளிவடிவமாக இருந்தது.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”
காற்றே, போற்றி. நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றியபொழுதிலே வானமுழுதும்
ப்ராணசக்தி நிரம்பிக் கனல்வீசிக்கொண்டிருந்தது.
ஆயிரமுறை அஞ்சலிசெய்து வணங்கினேன்.
காற்றுத்தேவன் சொல்வதாயினன்: -- “மகனே, ஏதடா
கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று
கேட்கிறாயா? இல்லை. அது செத்துப்போய்
விட்டது. நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு
கொண்ட உடல் இயங்கும். என்னுற வில்லாதது சவம்.
நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு
உயிர்த்திருந்தது’; சுகம்பெற்றது. சிறிது களைப்பெய்திய
வுடனே அதை உறங்க -- இறக்க -- விட்டு விட்டேன்.
துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்கு
மிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து
ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும்.
நான் விழிக்கச்செய்கிறேன். அசையச்செய்கிறேன். நான்
சக்திகுமாரன், என்னை வணங்கி வாழ்க” என்றான்.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.”
-பாரதியார்
No comments:
Post a Comment