சிந்துவெளி நாகரிகம்!!!

            
              இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை

              சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். 
தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்தநாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள், குடியேற்றங்களுடைய ஒரு தன்மைத்தான அமைப்பு இவையனைத்தும் ஒரு உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கிணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்திக் கீழ் அமைந்திருந்தமையைக் காட்டுகின்றது.

         
    சிந்துவெளி நாகரிகத்தின் பொருளாதாரம் வணிகத்திலேயே பெரும்பாலும் தங்கியிருந்தது எனலாம். போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டமை இதற்குக் காரணமாகும். சிந்துவெளி நாகரிக மக்களே சக்கரத்தை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும்.இன்று தெற்காசியா முழுவதும் காணக்கூடிய மாட்டு வண்டிகளும், படகுகளும் அன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம். படகுகள் பெரும்பாலும் சிறிய தட்டையான வடிவில் காணப்பட்டதோடு, இவை பாய்மரம் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கலாம். தொல்பொருளியலாளர்கள் மேற்கு இந்தியாவின் குஜராத்தின் கடற்கரை நகரான லோத்தலில் பாரிய ஆழமான கால்வாயொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு கப்பற்துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய கால்வாய் வலையமைப்பொன்றை எச்.பி. பிராங்போர்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
சிந்துவெளி எழுத்துக்கள்:


              முந்திய ஹரப்பாக் காலத்தில் (கிட்டத்தட்ட 3200–2600 BCE) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவை, மத்திய ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமிப் பிரதேசங்களுடன் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன.
              சிந்துவெளி நாகரிக கலைப்படைப்புகளின் பரவலைக் கொண்டு மதிப்பிடும் போது, வணிகத் தொடர்புகள் ஒரு பரந்த பிரதேசத்தில் நடைபெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பகுதிகள், பாரசீகத்தின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் மெசொப்பொத்தேமியாஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
சமயம்:
             
   
              சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடுஇலிங்க வழிபாடுபசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது.
             
                சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. 

கட்டிடக்கலை:
               சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
                  ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.
              பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும்வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்படன.
                சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள், அக்காலத்து மெசொப்பொத்தேமியாவில் காணப்பட்ட பெரும்பாலான ஸிகரெட்டுக்களிலும் பெரியவை.
                 இவ்வாறான கோட்டைகள் கட்டப்பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற, இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக, இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் (monumental structures) எதுவும் காணப்படவில்லை. இங்கே, அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான முடிவான சான்றுகளோ, அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில், பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற, சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும், இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம்.
                நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.
                தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment